உடுவில் பிரதேச செயலகத்தில் மின்சாரம் தாக்கி அபிவிருத்தி உத்தியோகத்தர் உயிரிழப்பு
யாழ்ப்பாணம், உடுவில் பிரதேச செயலகத்தில் சிரமதானப் பணியில் ஈடுபட்டிருந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
உடுவில் பிரதேச செயலகத்தில் சுதேச மருத்துவ அபிவிருத்தி உத்தியோகத்தராகக் கடமையாற்றி வந்த, இரண்டு பிள்ளைகளின் தாயாரான நிசாந்தன் சிந்துப்பிரியா (37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அரச அலுவலகங்களுக்கிடையில் நடைபெறும் உற்பத்தித்திறன் போட்டிக்கான மதிப்பீடு இன்று திங்கட்கிழமை இடம்பெறவிருந்த நிலையில், அலுவலகத்தை அழகுபடுத்தி ஒழுங்குபடுத்தும் பணிகளில் உத்தியோகத்தர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது, குறித்த உத்தியோகத்தர் அலுவலக வளாகத்திலுள்ள மூலிகைத் தோட்டத்திற்கு நீர் பாய்ச்சிக்கொண்டிருந்தபோது, அங்கு காணப்பட்ட மின்சார வயரில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக மின்சாரத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
அவரை சக உத்தியோகத்தர்கள் மீட்டு உடனடியாக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.







