தேசிய வாசிப்பு மாதம் அனுஷ்டிக்கப்பட்டு வருவதை முன்னிட்டு மன்னார் நகரசபையின் ஏற்பாட்டில், மன்னார் பொது நூலகத்தில் பாடசாலை மாணவர்களுக்கிடையேயான விநாடி வினாப் போட்டி நிகழ்வு ஒன்று இடம்பெற்றது.
தலைமை நூலகர் திருமதி V.R கொலின் தலைமையில் காலை 10 மணி அளவில் நேற்றைய தினம் (03.09) புதன்கிழமை, பொது நூலகத்தில் நடைபெற்ற இந் நிகழ்வில், தெரிவு செய்யப்பட்ட ஐந்து பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டனர்.
குறித்த ஐந்து பாடசாலைகளிலிருந்தும் தலா ஐந்து மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு வினாடிவினாப் போட்டியில் கலந்து கொண்டனர்.
மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி ,புனித சவேரியார் பெண்கள் கல்லூரி, எழுத்தூர் அன்னை திரேசா றோமன் கத்தோலிக்க தமிழ் அரசினர் கலவன் பாடசாலை , சித்தி விநாயகர் இந்துக் கல்லூரி மற்றும் அல் அஸ்கர் பாடசாலையைச் சேர்ந்த மாணவர்களே இப்போட்டியில் கலந்து கொண்டனர்.
இப்போட்டியில் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி மற்றும் புனித சவேரியார் பெண்கள் கல்லூரி ஆகிய இரண்டும் ஒரே புள்ளிகளைப் பெற்றமையால் இரண்டும் முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டன.
அத்துடன் எழுத்தூர் மன்.அன்னை திரேசா றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது.
இந்நிலையில்,போட்டியில் கலந்து கொண்டு கொண்டு வெற்றி பெற்ற மற்றும் கலந்துகொண்ட மாணவர்களுக்குப் பரிசில்களும் சான்றிதழ்களும் பின்னர் வழங்கப்படும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை ,மன்னார் நகர சபைக்கு உட்பட்ட தெரிவு செய்யப்பட்ட முன்பள்ளிகளில் முன்பள்ளி மாணவர்களுக்கான சித்திரப் போட்டியும் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், நகர சபையினால் விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு குறித்த விழாவில் சித்திரப் போட்டியில் வெற்றி பெற்ற முன் பள்ளி சிறார்களுக்கும் தற்போது நடந்து முடிந்த வினா விடை போட்டியில் பங்கு பற்றிய மாணவர்களுக்கும் குறித்த விழாவின்போது பரிசில்கள் வழங்கப்படும் என பிரதம நூலகர் V.R.கொலின் தெரிவித்துள்ளார்,
குறித்த வினா விடை போட்டியில் நடுவர்களாக நகர சபை உறுப்பினர்கள் இருவர் பங்கேற்றனர்.












