கணேமுல்ல சஞ்சீவ படுகொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பெண் சட்டத்தரணியை 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து மேலதிக விசாரணை செய்வதற்கு, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) அனுமதி கிடைத்துள்ளது.
கணேமுல்ல சஞ்சீவ படுகொலைச் சம்பவம் தொடர்பாக குறித்த பெண் சட்டத்தரணி நேற்றைய தினம் (29.10) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டார்.
கணேமுல்ல சஞ்சீவவை படுகொலை செய்வதற்காக வந்த இஷார செவ்வந்திக்கு, கைத்துப்பாக்கியை மறைத்து எடுத்து வருவதற்காக ‘தண்டனைச் சட்டக்கோவை’ நூலின் பிரதியொன்றை இந்தச் சட்டத்தரணியே வழங்கியுள்ளார் எனக் குறிப்பிடப்படுகின்றது.
கடந்த பெப்ரவரி 19 ஆம் திகதி, வழக்கு விசாரணையொன்றிற்காக சிறைச்சாலை அதிகாரிகளால் புதுக்கடை நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட கணேமுல்ல சஞ்சீவ, அந்த நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே சுட்டுக் கொல்லப்பட்டார்.
சம்பவத்தின் துப்பாக்கிதாரி அன்றைய தினமே பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட போதிலும், துப்பாக்கியை நீதிமன்ற வளாகத்திற்குள் கொண்டு வந்த இஷார செவ்வந்தி என்பவரைக் கைது செய்வதற்கு பாதுகாப்புப் பிரிவினர் கடும் பிரயத்தனம் மேற்கொண்டனர்.
அவர் கடந்த 14ஆம் திகதி நேபாளத்தில் தங்கியிருந்தபோது கைது செய்யப்பட்டார்.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் இஷார செவ்வந்தி தப்பிச் செல்வதற்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த பலரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.







