டிட்வா சூறாவளி மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் அது தொடர்பான தற்போதைய நிலைமைகளை நேரில் கண்டறிவதற்காக இன்றைய தினம் (13.12) சனிக்கிழமை ஜனாதிபதி மன்னாருக்கு விஜயம் மேற்கொண்டு இருந்தார்.
பிற்பகல் 1.30 மணியளவில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற விசேட அபிவிருத்தி குழு கூட்டத்தில் கலந்து கொண்ட ஜனாதிபதி,
நெடுஞ்சாலைகள், நீர் வழங்கல், தொடர்பாடல், நீர்ப்பாசனம், கைத்தொழில், மீன்பிடி, கால்நடை உற்பத்தி, சுகாதாரம், கல்வி உட்பட மாவட்டத்தில் பாதிப்புக்குள்ளான அனைத்து துறைகளையும் மீட்டெடுக்க மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டத்தின் தற்போதைய நிலை குறித்து கலந்துரையாடினார்.
இதன்போது, பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்த ஜனாதிபதி,
மேலும் ,சேதங்களுக்கான இழப்பீடு வழங்குவதை விரைவுபடுத்துமாறும், விவசாயம், மீன்பிடி மற்றும் தொழில்துறைகளை மீளக்கட்டமைக்கும் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
குறித்த விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில்,ஜனாதிபதி தலைமையிலான குழுவினர்,கூட்டுறவு பொருளாதார பிரதியமைச்சர்,வடமாகாண ஆளுநர் ,மன்னார் மாவட்ட செயலாளர்,வன்னி மாவட்டத்தின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள், அனைத்து பிரதேச செயலாளர்கள்,அனைத்து பிரதேச சபை நகர சபை தவிசாளர்கள்,அனைத்து திணைக்கள தலைவர்கள்,பொலிஸ் அதிகாரிகள்,முப்படை அதிகாரிகள் தேசிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.







