மன்னார் மாவட்டத்தில் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு ஊக்கமளிக்கும் நோக்கில்,
543ஆவது காலாட்படைப் பிரிகேட்டின் ஏற்பாட்டில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த 301 மாணவர்களுக்கு பாடசாலைப் பயிற்சிப் புத்தகங்கள் மற்றும் பாடசாலைப் பைகள் வழங்கும் நிகழ்வு இன்று (04.06) வியாழக்கிழமை காலை நடைபெற்றது.
மன்னார் மறை மாவட்ட குடும்பநலப் பணியக மண்டபத்தில் நடைபெற்ற இந் நிகழ்வில் , மன்/புனித சவேரியார் பெண்கள் கல்லூரி, மன்/புனித அன்னை திரேசா ரோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலை, மற்றும் மன்/சாந்திபுரம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை ஆகியவற்றில் கல்வி கற்கும் 301 மாணவர்களுக்கு இவ்வுதவிப் பொருட்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் கே.எம்.பி.எஸ்.பி. குலதுங்க பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதுடன்
சிறப்பு விருந்தினர்களாக,
அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், மன்னார் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எரிக் ரஞ்சித் ,54 ஆவது காலாட்படை பிரிவின் தளபதி ஓ.எஸ்.கே. பெரேரா வடமத்திய கடற்படை கட்டளையின் துணைத் தளபதி கொமாண்டர் வல்பொல,பாதுகாப்பு படை தலைமையகம் வன்னி நிர்வாக பிரிகேடியர் டி.டி.டி. சேரசிங்க, 543 வது காலாட்படை பிரிவின் தளபதி பிரிகேடியர் ஏ.எச்.ஆர்.ஹசந்த, 542 வது காலாட்படையின் தளபதி கேணல், எல். டபிள்யூ .டபிள்யூ ரிதிமாலியந்த, மன்னார் பிரதேச செயலாளர் ம.காந்தீபன், மன்னார் மாவட்ட கல்விப்பணிப்பாளர் கே. செல்வன், மன்னார் வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் ஆசாத் எம் ஹனிபா, மனிதநேய செயற்பாட்டாளர் மொஹமட் ரிஷான் ஷேக் அமானி, நகர சபைத் தலைவர் டானியல் வசந்தன் மற்றும் சர்வ மத தலைவர்கள் கலந்து கொண்டதுடன்,
54ஆவது படைப்பிரிவின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த இராணுவத்தினர் பாடசாலைகளின் அதிபர்கள் ஆசிரியர்கள் எனப் பலரும் பங்கேற்றிருந்தனர்.
இந்நிகழ்விற்கான நிதி அனுசரணையை மொஹமட் ரிஷான் ஷேக் அமானி வழங்கியிருந்தார்.
மூவின மக்களிடையே சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் நோக்கில் இவ்வாறான மனிதநேய பணிகள் இராணுவத்தினரால் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.







