நாட்டைச் சூழவுள்ள கடற்பிராந்தியங்களின் பல பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் செம்மஞ்சள் நிற விசேட எச்சரிக்கையை விடுத்துள்ளது.
அதன்படி இன்று (05) முற்பகல் 11.00 மணி முதல் நாளை (06) முற்பகல் 11.00 மணி வரை இந்த விசேட எச்சரிக்கை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, காங்கேசன்துறை முதல் மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடற்பிராந்தியங்களிலும் மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களிலும் மணித்தியாலத்துக்கு 55 முதல் 65 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் ஏனைய கடற்பிராந்தியங்களிலும் மணித்தியாலத்துக்கு சுமார் 50 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் இரத்தினபுரி, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் மணித்தியாலத்துக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.







