நீதிமன்றத் தீர்ப்புக்கமைவாக மன்னார் பள்ளிமுனைப் பிரதேசத்தில் அமைந்துள்ள கடற்படை முகாமில் நில அளவீட்டிற்கான செயற்பாட்டினை தற்காலிகமாக நிறுத்துவதற்கான கோரிக்கை ஒன்றினை அப்பிரதேச மக்கள் பிரதிநிதிகள் நேற்று (17.06)செவ்வாய்க்கிழமை காலை 10,30 மணியளவில் மன்னார் அரச அதிபரிடம் கையளித்துள்ளனர்.
குறித்த கோரிக்கையில், கடற்படை வசம் உள்ள காணியினை மக்களிடம் மீளவும் கையளிக்குமாறு ஜனாதிபதிக்கு கடிதமொன்றினை அனுப்பிவைத்துள்ளதாகவும் அக்கடிதத்திற்கு பதில் வரும்வரை மேற்குறிப்பிட்ட காணியினை அளக்கும் செயற்பாட்டினை நிறுத்தி வைக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர்(காணி), திட்டமிடல் பணிப்பாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.







