தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தில் இன்று (27.09) இடம்பெற்ற தவெக தலைவர் விஜயின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலால் சுமார் 31 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உயிரிழந்தவர்களில் 6 சிறார்களும், 16 பெண்களும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சம்பவத்தில் 45க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கியும் கூட்டம் நிறைவடைந்து மக்கள் கலைந்து சென்றபோது ஏற்பட்ட நெரிசலில் சிக்கியும் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்கவும், நோயாளர் காவு வண்டிகளைத் தயார் நிலையில் வைக்கவும் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பணிப்புரை விடுத்துள்ளார்.
இந்தநிலையில் சம்பவம் குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கவலை தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “கரூரிலிருந்து வரும் செய்திகள் கவலையளிக்கின்றன. நிலைமையைச் சீராக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன,” என தெரிவித்துள்ளார்.
பெரும்பாலானோர் பிரசாரக் கூட்டத்திலேயே உயிரிழந்ததாகவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தமிழ்நாடு சுகாதார அமைச்சை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
இதேவேளை தமிழக முதல்வர் நாளை காலை (28.09) கரூர் மாவட்டத்திற்குப் பயணமாகவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.







