கடந்த ஜூலை மாதம் தெமட்டகொடை குப்பியாவத்தை பகுதியில் நபரொருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ய முயன்ற சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் ஒருவரும், மற்றொருவரும் பொரளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, நேற்று(05)லேக் டிரைவ் பகுதியில் பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை சோதனையிட்டபோது, அவரது வசமிருந்து 10 கிராம் 900 மில்லிகிராம் ஐஸ் (மெத்தாம்பெட்டமின்) போதைப்பொருள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளில், கைது செய்யப்பட்ட 23 வயதுடைய பொரளை பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர், கடந்த ஜூலை 23 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரில் வாகனத்தை செலுத்திய நபர் என்பது தெரியவந்துள்ளது.
இதனுடன், சந்தேகநபருடன் இருந்த அதே பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய மற்றொருவரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் அவருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து பொரளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்







