கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அமைந்துள்ள வடக்கு மாகாண பெண் நோயியல் மருத்துவ நிலையத்தை இயங்காமல் செய்து அங்குள்ள நவீன மருத்துவ உபகரணங்களை வேறு மருத்துவமனைகளுக்கு இடமாற்றும் முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று ( 29.08.) வெள்ளிக் கிழமை கிளிநொச்சி வைத்தியசாலை முன்றில் கவனயீர்ப்பு போாட்டம் ஒன்று நோயாளர் நலன்புரிச் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் திறந்து வைக்கப்பட்டு இன்றுவரை இயங்காத நிலையில் காணப்படுகின்ற இச்சிகிச்சைப் பிரிவை ஆரம்பிக்க வேண்டுமென்றும் தேவையான ஆளணிகளை நியமிக்குமாறு கோரியும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் பிரதேச சபை உறுப்பினர்கள் கிளிநொச்சி மாவட்ட வர்த்தகர்கள் பிரதேச மக்கள் நலன்புரி சங்க நிர்வாகத்தினர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.









